முற்காலத்தில் மழநாடு என்னும் பகுதியை ஆட்சி செய்து வந்த கொல்லிமழவன் என்ற அரசனின் மகளுக்கு தீராத வயிற்று வலி மற்றும் வலிப்பு நோய் இருந்து வந்தது. இதற்கு 'முயலக நோய்' என்று பெயர். பல்வேறு வைத்தியர்களை அழைத்து சிகிச்சை அளித்தாலும் குணப்படுத்த முடியாத இந்நோயை திருஞானசம்பந்தப் பெருமான் நீக்கிய தலம்.
இத்தலத்து மூலவர் 'மாற்றறிவரதர்' என்று அழைக்கப்படுகின்றார். வன்னி மரங்கள் சூழ்ந்த தலமாதலால் இறைவன் 'சமீவனேஸ்வரர்' என்றும், பிரம்மதேவன் வழிபட்டதால் 'பிரம்மபுரீஸ்வரர்' என்றும் போற்றப்படுகின்றார். அம்பிகை 'பாலசௌந்தரி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இங்கு நடராஜரின் பாதத்தில் முயலகனுக்குப் பதிலாக சர்ப்பம் உள்ளது. அதனால் 'சர்ப்ப நடராஜர்' என்று அழைக்கப்படுகிறார். இவரது சடாமுடியும் விரிந்து இல்லாமல் முடிந்து இருக்கும். அடியார்களுக்கு அமுது செய்ய சிவபெருமானிடம் இருந்து சுந்தரர் பொன் பெற்றத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.
இக்கோயிலில் சூரியபகவான் தனது மனைவிகளாக உஷா மற்றும் பிரத்யுஷாவுடன் இருக்க, மற்ற நவக்கிரகங்கள் அவரை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். உமாதேவி, பிரம்மதேவன், லட்சுமி, அகத்திய முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|